தமிழ் சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாத ஒன்று. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிது கிடையாது. இதில் பல சினிமா பிரபலங்கள் அரசியளுக்கு வந்து முதலமைச்சர் ஆனதும், ஒரு சிலர் வந்த வழியிலேயே காணாமல் போனதும் உண்டு.
அந்த வகையில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர் எல்லோராலும், அம்மா என்றும், அயர்ன் லேடி என்று அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள். இவர் அழைத்தும் அரசியலுக்கு வராமல் அதற்கு நோ சொன்ன ஒரு நடிகர் தமிழ் சினிமாவில் இருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக அவர் பீக்கில் இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
90களில் அதிக அளவிலான பெண் ரசிகர்களைக் கொண்டு சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் பிரசாந்த். 90களில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்த பிரஷாந்திடம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை அரசியலுக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை பிரசாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஒரு பேட்டியில் பேசுகையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
"நடிகர் பிரசாந்த் தனது பிறந்தநாளின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி வாங்க சென்றபோது, அவரிடம் ஜெயலலிதா, 'உங்களுக்கு அரசியலுக்கு வர ஆர்வம் இருக்கிறதா பிரசாந்த்?' என்று கேட்டார். ஆனால், பிரசாந்த் தனக்கு அப்படியான ஆசை இல்லை என்றதோடு நிறைய திரைப்படங்களில் நடிப்பதே தனது ஆசை என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது; அது ஒரு நல்ல வாய்ப்பு. அப்போதே பிரசாந்த் சரி என்றிருந்தால் அரசியலுக்கு வர வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் பிரசாந்த் அதனை விரும்பவில்லை. நானும் பிரசாந்தை அரசியலுக்கு செல்லச் சொல்லி வற்புறுத்தவில்லை. ஏனென்றால் அது அவரின் தனிப்பட்ட விருப்பம். நான் அதில் தலையிட முடியாது என்றும், நடிகர் தியாகராஜன் அப்போது நடந்த சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.