19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இரவு 07 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
போட்டியின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 06 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி அபார வெற்றிப்பெற்றது. ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பௌலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே மற்றும் ஃபின் ஆலன் ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.
இதில் ரஹானே 40 பந்துகளில் 67 ரன்களும், அங்க்ரிஷ் ரகுவன்ஷி 29 பந்துகளில் 51 ரன்களும் விளாசினர். இறுதி கட்டத்தில் ரிங்கு சிங் மற்றும் ரமன்தீப் சிங் ஆகியோரின் பங்களிப்பால் கேகேஆர் அணி 20 ஓவர்களில் 04 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் ஷர்துல் தாக்கூர் 03 விக்கெட்டுகளைக் வீழ்த்தினார். அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டியா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.
221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ரயான் ரிக்கெல்டன் ஜோடி அதிரடி காட்டினர். அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் 'ஹிட்மேன்' ரோகித் சர்மா தனது பழைய பாணியில் விஸ்வரூபம் எடுத்து அதிரடியாக ஆடினார்.
அவர் வெறும் 38 பந்துகளில் 06 சிக்ஸர்கள் மற்றும் 08 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் ரயான் ரிக்கெல்டன் 43 பந்துகளில் 81 ரன்கள் விளாசி ரன் அவுட் ஆனார். இவர்களின் 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் மும்பையின் வெற்றியை இலகுவாக்கியது.
அடுத்து மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் (16) மற்றும் திலக் வர்மா (20) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா பதற்றமின்றி விளையாடி 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
அதன்படி, 19.1 ஓவரில் 04 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 224 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 13 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக முதல் போட்டியில் மும்பை அணி வெற்றிப் பெற்றுள்ளது.