தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள அளவந்திபுரம் மெயின் ரோட்டில் பாலாஜி என்பவர் பெட்டிக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வந்த நபர் ஒருவர், 200 ரூபாய் நோட்டைக் கொடுத்து, 30 ரூபாய்க்கு மட்டும் பொருட்கள் வாங்கி, மீதி சில்லறை கேட்டுள்ளார்.
அப்போது நோட்டை வாங்கிய, கடைக்காரர் அந்த நோட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதாவது, அந்த நபர் கொடுத்த நோட்டு கள்ள நோட்டு என்பதை கண்டுபிடித்துள்ளார்.
உடனே கத்தி கூச்சலிட்ட பாலாஜி, அக்கம்பக்கத்துக் கடைக்காரர்களின் உதவியுடன் மர்ம நபரைப் பிடித்துள்ளார். அதன் பின்னர் கபிஸ்தலம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்து பிடிபட்டவரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்டவர், திருவாரூர் மாவட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்த 30 வயதான மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. இவர் 200 ரூபாய் கள்ள நோட்டுகளைக் கைமாற்றி கல்லாக்கட்டி வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அதிரடி நடவடிக்கையில் இருக்கிய போலீசார் இவரிடம் இருந்து 21 ஆயிரத்து 600 ரூபாய்க்குக் கள்ள நோட்டுகள் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து இவருக்கு எப்படி இந்த நோட்டுகள் கிடைத்திருக்கும்? கலர் ஜெராக்ஸ் எடுத்து கைவரிசை காட்டியுள்ளாரா..? அல்லது கள்ள நோட்டு கும்பலிடம் இருந்து நோட்டுகளை வாங்கி வந்து, உள்ளூரில் கைமாற்றிவிட்டாரா? என்பது குறித்தும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.