தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது நான்கு முனைப் போட்டியால் சூடுபிடித்துள்ளது. திமுக தலைமையிலான மெகா கூட்டணி, பாஜக-பாமக ஆதரவுடன் களம் காணும் அதிமுக, முதல்முறையாகப் போட்டியிடும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி எனப் போட்டி பலமாக உள்ளது.
இந்தச் சூழலில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சொந்த மாவட்டமான சிவகங்கையின் காரைக்குடி தொகுதியில் போட்டியிட முடிவு செய்து, தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ஆளும் கட்சியினரை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
இலவசப் பொருட்களுக்காக மக்களைக் கையேந்த வைப்பது சரியல்ல என்றும், தான் மக்களிடம் திரள் நிதி பெற்று கட்சி நடத்துவதாகவும் குறிப்பிட்டார். மேலும், “குடிக்கும் மக்களின் வாக்கு எனக்கு வேண்டாம், பொறுப்புள்ள குடிமக்களின் வாக்குகள் மட்டுமே எனக்கு வேண்டும்” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். சீமானின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.