மும்பை: நடுக்கடலில் உள்ள ஒ.என்.ஜி.சி எண்ணெய் கிணற்றில் தீவிபத்து - 10 பேர் காயம்
Vikatan April 04, 2026 02:48 PM

மும்பை கடல் பகுதியில் ஒ.என்.ஜி.சிக்கு சொந்தமான எண்ணெய் கிணறு இருக்கிறது. இந்த எண்ணெய் கிணற்றில் நேற்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனே அவசர நிலை அறிவிக்கப்பட்டு பணியாளர்கள் அனைவரும் பத்திரமான இடத்திற்கு மாற்றப்பட்டனர். தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீவிபத்தில் 10 ஊழியர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

எஸ்.பி.எச் என்ற எண்ணெய் கிணற்றில் இந்த தீவிபத்து ஏற்பட்டதாகவும் தீ அணைக்கப்பட்டு பணிகள் மீண்டும் தொடங்கிவிட்டதாக ஒ.என்.ஜி.சி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை தீவிபத்துக்கான காரணம் என்னவென்று அறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒ.என்.ஜி.சி தெரிவித்துள்ளது. தற்போது ஈரான் போரால் ஏற்கனவே எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இத்தீவிபத்து சிறிய அளவில் ஏற்பட்டது. பெரிய அளவில் இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் இந்தியாவின் எரிபொருள் பற்றாக்குறை மேலும் அதிகரித்து இருக்கும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.