குவைத் எண்ணெய் கிணறு, குடிநீர் ஆலை மீது அட்டாக்; சுத்தி சுத்தி அடிக்கும் ஈரான்; கலக்கத்தில் அரபு நாடுகள்
ஸ்ரீராம் ஆராவமுதன் April 04, 2026 03:14 PM

மத்திய கிழக்கு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், நேற்று அமெரிக்க கூட்டுப்படைகளால் ஈரானின் மிக முக்கியமான பாலம் ஒன்று பயன்படுத்த முடியாத அளவிக்கு தாக்கி தகர்க்கப்பட்டது. இதனால் கோபமடைந்த ஈரான், கடும் எச்சரிக்கைகளை விடுத்த நிலையில், அரபு நாடுகள், அதாவது, குவைத், பஹ்ரைன், அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட இடங்களில் கடுமையான தாக்குதல்களை நடத்தி, எண்ணெய் கிணறு, குடிநீர் ஆலை போன்றவற்றை அடித்து நொறுக்கி வருகிறது. இதனால், அரபு நாடுகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

“ஈரானை கோபப்படுததிய பாலம் மீதான தாக்குதல்“

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்த நிலையில், அந்த போர் தீவிரமடைந்து, 5-வது வாரத்தை கடந்துள்ளது. இரு தரப்பும் விட்டுக்கொடுக்காமல் அடிப்பதால், அந்த பிராந்தியமே பதற்றத்தின் உச்சத்தில் உள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஈரானின் கராஜ் நகரில் உள்ள பி1 என்ற முக்கியமான, மிக உயரமான பாலம் ஒன்றின் மீது, அமெரிக்க கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில், அது பயன்படுத்த முடியாத அளவிற்கு சிதைந்துள்ளது.

மேலும், அந்த வீடியோவை நேற்று வெளியிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மேலும் நிறைய வரும் என்று கூறி எச்சரிக்கை விடுத்தார். இதனால், ஈரான் மிகுந்த கோபம் அடைந்தது.

ஈரான் விடுத்த பதில் எச்சரிக்கை

தங்களது பாலம் தகர்க்கப்பட்ட உடனேயே கோபத்தில் ஈரான் பதிலடியை தொடங்கியது. இஸ்ரேலின் மீது முதலில் தாக்குதல் நடத்தி, ஒரு ரயில் நிலையம் மற்றும் கட்டிடத்தை சேதப்படுத்திய ஈரான், அரபு நாடுகளில் உள்ள பாலங்களை தகர்க்கப் போவதாக எச்சரிக்கை விடுத்து நேற்று 8 இடங்களின் பட்டியலையும் வெளியிட்டது.

அதேபோல், அரபு நாடுகளில் உள்ள எண்ணெய்க் கிணறுகள், குடிநீர் ஆலைகளையும் தாக்கியுள்ளது.

குவைத்தில் பற்றி எரியும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் ஆலை

பதில் தாக்குதலில் அரபு நாடுகளை குறி வைத்துள்ள ஈரான், குவைத்தில் உள்ள மினா அல்-அஹமதி எண்ணெய் சத்திகரிப்பு ஆலை மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. அதில், அந்த ஆலை தீப்பற்றி எரிந்துவரும் நிலையில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், 90 சதவீத பயன்பாட்டிற்கு கடல்நீரை குடிநீராக்கும் குவைத்தில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையின் மீதும் ஈரான் ட்ரோன் தாக்கதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஆலையின் சில பகுதிகள் சேதமடைந்ததாக, குவைத் உறுதிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதும் தாக்குதல்

இது மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியை நோக்கி ஏவப்பட்ட ஈரானின் ட்ரோனை அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து தாக்கியதாக கூறப்பட்டுள்ளது. அந்த நிகழ்வின்போது, ஏவுகணையின் பாகங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையமான ஹப்ஷான் எரிவுயு நிலையத்தின் பதப்படுத்தும் தளத்தின் மீது விழுந்ததால், அங்கு தீ விபத்து ஏற்பட்டு, அந்நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஹ்ரைன், சவுதி அரேபியாவிலும் தாக்குதல்

இதேபோல், பஹ்ரைனிலும் ஈரானின் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றதால், அங்கு எச்சரிக்கை சைரன் ஒலித்தபடி இருந்துள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியா மீது ஏவப்பட்ட ஈரானின் ட்ரோன்களை அழித்து விட்டதாக சவுதி தெரிவித்துள்ளது.

தங்கள் பாலம் தாக்கப்பட்டதற்கு வளைகுடா நாடுகளுக்கு பலமான பதிலடி கொடுத்துவரும் ஈரானால், தற்போது அரபு நாடுகள் கலக்கத்தில் உள்ளன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.