மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு விடுத்துள்ள பகீர் எச்சரிக்கை உலக நாடுகளை உறைய வைத்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது. தற்போது ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஜலசந்தியைத் திறக்க டிரம்ப் விதித்த 10 நாட்கள் கெடு முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணியாமல் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், போர் அடுத்த அபாயகரமான கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “செவ்வாய்க்கிழமை ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது மிக மோசமான தாக்குதல் நடத்தப்படவுள்ளது” என எச்சரித்துள்ளார்.
“ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்துவிடுங்கள் முட்டாள்களே… இல்லையென்றால் நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். பொறுத்திருந்து பாருங்கள்!” என அவர் பதிவிட்டுள்ளது, ஈரான் மீதான முழுமையான வான்வழித் தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகிவிட்டதைக் காட்டுகிறது.
டிரம்பின் இந்த ஆக்ரோஷமான பதிவு, ஏற்கனவே பதற்றத்தில் உள்ள மத்திய கிழக்கு நாடுகளை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.