பரமக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகால பிரபாகரின் விமர்சனங்களை முன்வைத்து பாஜகவை கடுமையாகச் சாடினார். “பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் மாநில உரிமைகள் மீது விழும் மரண அடி” என்று பரகால பிரபாகரே எச்சரித்துள்ளதை ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
மக்களின் உணவு மற்றும் உடை உரிமைகளில் தலையிடும் பாஜகவை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மேற்கு வங்கத்தில் சிஏஏ (CAA) சட்டத்தை அமல்படுத்துவோம் எனச் சவால் விடும் பாஜகவால், தமிழ்நாட்டில் அப்படிச் சொல்ல முடியாது என்றும், அதற்குத் தடையாகப் பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் உருவாக்கிய ‘திராவிடப் பெருஞ்சுவர்’ காத்து நிற்பதாகவும் முதல்வர் ஆவேசமாக முழங்கினார்.