மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதமாவதற்கு திமுக அரசே முழு காரணம் என்று கடுமையாகச் சாடினார். ரூ.2,021 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த மருத்துவமனைக்கான நிலத்தை ஒப்படைப்பதற்கே 2022 முதல் 2024 வரை திமுக அரசு காலதாமதம் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். ”எய்ம்ஸ் வளாகத்தில் ஒரு மரத்தை வெட்டுவதற்கு அனுமதி கொடுக்கக் கூட எட்டு மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.
பிரதமர் மோடியையும், மறைந்த ஜெயலலிதா அம்மாவையும் மக்கள் பாராட்டி விடுவார்கள் என்ற பொறாமையினால் திமுக இந்தத் திட்டத்தை முடக்கப் பார்க்கிறது” என்று அவர் ஆவேசமாகப் பேசினார். இருப்பினும், தற்போது பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், வரும் 2026-ம் ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் மதுரை எய்ம்ஸ் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.