சமூக வலைத்தளப் பிரபலமாக அறியப்படும் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் நேர்காணல் ஒன்றுக்கு சென்ற இடத்தில் கேமராவை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிப்பு அரக்கன் என தன்னைத் தானே சொல்லிக் கொண்டு வாட்டர்மெலன் ஸ்டார் என்ற பட்டத்தோடு உலா வருபவர் திவாகர். அக்குபஞ்சர் மருத்துவரான இவர் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் மக்களிடையே பிரபலமானார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் கலந்துக் கொண்டு மேலும் பிரபலமானார். தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். இப்படியான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாதியைப் பற்றி பேசி மிகப்பெரிய அளவில் திவாகர் சர்ச்சையில் சிக்கினார்.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், “குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டதாகவும், அங்கு தன்னை கானா வினோத், புகழ், மாகாபா ஆனந்த் ஆகியோர் தாக்கி விட்டதாகவும் தெரிவித்தார். இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் புகாரளித்தார். இதில் மாகாபா ஆனந்த் செட்டிலேயே மது அருந்திவிட்டு தன்னை தாக்கியதாகவும், விலக்கி விட வந்த அறந்தாங்கி நிஷா, சுனிதாவுக்கு காயம் ஏற்பட்டதாகவும் பரபரப்பை கிளப்பினார்.
இதனைத் தொடர்ந்து கானா வினோத், புகழ், மாகாபா ஆனந்த் ஆகியோர் காவல் நிலையம் வந்து விளக்கம் கொடுத்தார்கள். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாகாபா ஆனந்த், “குக் வித் கோமாளி செட்டில் ஒரு பெண் மீது அவரது கணவருக்கு எதிராகவே கைபோட்டு விட்டு என்னுடன் கொஞ்ச நாள் இருக்கிறாயா? என கேட்டார். எங்களிடம் அதற்கான ஆதாரம் இருக்கிறது” என கூறினார்.
View this post on Instagram
இந்த நிலையில் தான் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளிக்க சென்றபோது திவாகர் பிரச்னை செய்திருக்கிறார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், “அறந்தாங்கி நிஷாவுக்கும், எனக்கும் நடந்த பிரச்னை தொடர்பாக PROVOKE என்ற யூட்யூப் சேனல் என்னை நேர்காணலுக்கு அழைத்தது. அங்கிருக்கும் ஒரு நபர், மேலும் சிலருடன் கூட்டு சேர்ந்துக் கொண்டு என்னை தாக்கினார். என் அனுமதி இல்லாமல் வீடியோ எடுக்கிறார்கள். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாராக இது பதிவாகும். என்னை நேர்காணலுக்கு என அழைத்து விட்டு ஒரு இடத்தில் அடைத்து வைத்து அநாகரீகமாக கேள்விகளை எழுப்புகிறார்கள். உடனே நான் மதுரை கமிஷனர் அலுவலகத்துக்கு செல்கிறேன். மக்களே என்னை தாக்குகிறார்கள். நான் தனியாளாக இருக்கிறேன். மிரட்டி என்னை அடிக்க வருகிறார்கள். இந்தச் சம்பவத்திற்கு பின்னால் புகழ், மா.கா.பா.ஆனந்த் காரணமாக இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.