ஒட்டகம் பருத்திக்கொட்டை கனவு காண்பது போல.. டிரம்பின் கருத்தை கிண்டல் செய்த ஈரான்!
Webdunia Tamil April 17, 2026 09:48 PM

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் ஒரு வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தை எட்ட "மிக நெருக்கமான" நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க அந்த நாடு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதன் மூலம் அமெரிக்காவிற்கு எண்ணெய் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற அதிகாரம் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் முன்னெடுத்த சமரச பேச்சுகளுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆனால் டிரம்பின் இந்தக் கூற்றுகளை ஈரான் அரசு ஊடகம் கடுமையாக கிண்டல் செய்துள்ளது. இது குறித்துப் பாரசீக பழமொழி ஒன்றை பகிர்ந்துள்ள ஈரான், "ஒட்டகம் பருத்திக்கொட்டை கனவு காண்பது போல" டிரம்ப் ஆகாயத்தில் கோட்டை கட்டுகிறார் என்று விமர்சித்துள்ளது. அதாவது நடக்க வாய்ப்பில்லாத ஒன்றை டிரம்ப் பகல் கனவு காண்பதாக ஈரான் சாடியுள்ளது.

ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டும் உரிமையை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்கா 20 ஆண்டுகள் அணுசக்தி திட்டத்தை நிறுத்த கோரும் நிலையில், ஈரான் 5 ஆண்டுகள் மட்டுமே இடைநிறுத்தம் செய்ய முன்வந்துள்ளது.

பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு நிலவும் பதற்றமான சூழலில், டிரம்பின் இந்த "அமைதி ஒப்பந்த" அறிவிப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.