நான் எம்.எல்.ஏ ஆன ஈசியா என்னை பாக்கலாம்!. கஷ்டமா இருக்காது!.. விஜய் கொடுத்த நம்பிக்கை
Webdunia Tamil April 17, 2026 09:48 PM


தமிழகத்தில் வருகிற 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. எனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன. இதில் நட்சத்திர வேட்பாளராக விஜய் பார்க்கப்படுகிறார். ஏனெனில், விஜய்க்கு சில கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் விஜய் செல்லுமிடமெங்கும் அவரை பார்ப்பதற்கு பலரும் கூடிவிடுகிறார்கள். எனவே, இந்த சட்டமன்ற தேர்தலில் தவெக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது. குறிப்பாக விஜய் 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் இப்போது பிரச்சாரத்திற்காக வெளியே வருவதால் அவரை சுலபமாக பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் அது அவ்வளவு எளிதில் அமைந்துவிடாது. ஏனெனில், வீட்டிலிருந்து கிளம்பினார் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு செல்வார். அங்கிருந்து நேராக வீடுதான். ஷூட்டிங் நடக்கும் இடத்திலும் அவரை பார்க்க முடியாது. விஜயின் வீட்டின் முன்பு போய் நின்றாலும் அவர் வெளியே வரமாட்டார். அதனால்தான் விஜய் இப்போது வெளியே வரும்போது அவரைக்காண பல ஆயிரம் பேர் கூடிவிடுகிறார்கள்.

இந்நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் தவெக நிர்வாகிகள் முன்பு வாக்குறுதி புத்தகத்தை விஜய் வெளியிட்டார்.. அப்போது ‘என் அம்மா, அக்கா, தங்கைகளுக்கு ஒரு கோரிக்கை.. நீங்கள் எல்லோரும் எனக்காக உங்கள் வீட்டு வாசலில் விசில் சின்னத்தை கோலமாக போட வேண்டும்.. அது எனக்கு நீங்க கொடுக்கிற பெரிய ஆதரவாக இருக்கும்’ என கோரிக்கை வைத்தார்.

மேலும், நான் சட்டமன்ற வேட்பாளராக வெற்றிபெற்றால் மாதம் ஒருமுறை என் தொகுதிக்கு வருவேன். அதோடு, என்னையும் நீங்கள் சுலபமாக சந்திக்க முடியும். என்னை சந்திப்பது கஷ்டமான ஒன்றாக இருக்காது’ என நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.