குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2026 ஆட்டத்தின் போது, ஐசிசி தலைவர் ஜெய்ஷா மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி ஆகியோர் ரசிகர்களுடன் சாதாரண வரிசையில் அமர்ந்து போட்டியை ரசித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், உயர்தர விஐபி அறைகளில் அமர்ந்து போட்டியைப் பார்ப்பதைத் தவிர்த்து, இருவரும் பொதுமக்களுக்கான கேலரியில் அமர்ந்து போட்டியைப் பார்த்தனர்.
போட்டியின் இடையே கேமராக்கள் இவர்களை நோக்கித் திரும்பிய போது, இருவரும் எந்தவித ஆரவாரமும் இன்றி ரசிகர்களுடன் இயல்பாக அமர்ந்து ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பொதுவாக ஐபிஎல் போட்டிகளுக்குப் பல விஐபிக்கள் வருவது வழக்கம்தான் என்றாலும், உயர் பதவியில் இருக்கும் நிர்வாகிகள் இப்படிச் சாதாரண ரசிகர்களுடன் கலந்து அமர்வது மிக அபூர்வமான ஒன்று எனப் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். “விஐபி கலாச்சாரம் முடிவுக்கு வருகிறது” எனப் பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது ஐசிசி (ICC) தலைவராகப் பொறுப்பு வகிக்கும் ஜெய் ஷா, இதற்கு முன் பிசிசிஐ செயலாளராக இருந்தார். அப்போது சௌரவ் கங்குலி பிசிசிஐ தலைவராகப் பணியாற்றினார். தற்போது கங்குலி மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் (CAB) தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.