நடிகர் பிரகாஷ் ராஜின் விமர்சனங்களுக்குப் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் குஷ்பூ மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “கட்சி மாறுவது பற்றிப் பேசும் பிரகாஷ் ராஜ், பி.டி.ஆர் ஏற்கனவே சொன்னதையே திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்குத் திமுகவின் வரலாறு தெரியுமா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், “திமுகவில் அமைச்சர்களாக இருக்கும் செந்தில் பாலாஜி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், சேகர் பாபு ஆகியோர் என்ன அங்கேயே பிறந்து வளர்ந்தவர்களா? அவர்கள் எல்லாம் எங்கிருந்து வந்தார்கள் என்பது ஊருக்கே தெரியும்.
சொல்லப்போனால், திமுகவின் வரலாற்றைப் பார்த்தாலே அது வேறொரு கட்சியில் இருந்து பிரிந்து வந்த கட்சிதான். அங்கேயே வெளியே இருந்து வந்தவர்கள் தான் இன்று அதிகாரத்தில் இருக்கிறார்கள். எனவே, என்னைப் பார்த்துப் பேசுவதற்கு முன்னால் உங்கள் கட்சியின் வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள்” என்று அதிரடியாகத் தெரிவித்தார். குஷ்பூவின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் திமுக மற்றும் பாஜக தொண்டர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.