விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிரபார்த்து காத்திருந்த திரைப்படம் ஜனநாயகன். கடந்த ஜனவரி 9ம் தேதி இப்படம் ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் படம் அப்போது வெளியாகவில்லை. ரிலீஸுக்கு 3 நாட்களுக்கு முன்பு படம் மறுதணிக்கை செய்யப்படவேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் ஷாக்கான தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என வழக்கு மாறி மாறி சென்று ஒரு மாதம் ஓடிப்போனதே தவிர படத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை. எனவே, வழக்கை வாபஸ் பெற்றதோடு, மறுதணிக்கைக்கும் தயாரிப்பாளர் விண்ணப்பித்தார். ஆனால், இப்போது வரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை.
படத்தில் தேர்தல் தொடர்பான காட்சிகள் இருப்பதால் தேர்தல் ஆணையம் இந்த படத்தை பார்க்கவேண்டும் என தணிக்கை வாரியம் தரப்பில் சொன்னதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் வெளியாகி தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. போலீசாரின் விசாரணையில் வீடியோ எடிட்டர் படத்தை திருடியது தெரியவந்தது. அந்த நபரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில்தான், தேர்தல் முடிந்து அடுத்த நாள் அதாவது ஏப்ரல் 24ம் தேதி ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழை கொடுக்க தணிக்கை வாரியம் முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அனேகமாக ஏப்ரல் 30ம் தேதி ஜனநாயகன் படம் தியேட்டரில் வெளியாக வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.