மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டுள்ள அமெரிக்கக் கடற்படை, ஈரானின் சரக்குக் கப்பலைச் சிறைபிடித்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் துறைமுகங்களை முடக்கும் நோக்கில் அமெரிக்கா இந்த முற்றுகையை மேற்கொண்டு வரும் வேளையில், ‘டவுஸ்கா’ என்ற ஈரான் சரக்குக் கப்பல் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தை நோக்கிச் செல்ல முயன்றது.
அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி முன்னேறிய அந்தக் கப்பலை, ஓமன் கடல் பகுதியில் வைத்து அமெரிக்கக் கடற்படை அதிரடியாகப் பறிமுதல் செய்தது. இந்தச் செயலுக்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “இது ஒரு சட்டவிரோத கடற்கொள்ளைத்தனமான செயல்” என்று சாடியுள்ள ஈரான், கப்பல் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
சர்வதேச கடல்சார் அமைப்பும் ஐநா பாதுகாப்பு சபையும் இதில் தலையிட்டு கப்பலை மீட்க வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. அதே சமயம், தனது இறையாண்மையைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயங்க மாட்டோம் என ஈரான் எச்சரித்துள்ளதால், அந்தப் பகுதியில் எந்நேரமும் போர் வெடிக்கும் சூழல் நிலவுகிறது.