வாக்காளர்களின் செல்போன்களை வைக்க சிறப்பு பைகள் - தேர்தல் ஆணையத்தின் 'ஸ்பெஷல்' டோக்கன் சிஸ்டம்!
Dinamaalai April 23, 2026 09:48 AM

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்க உள்ள நிலையில், வாக்காளர்களின் நீண்ட நாள் புகாரைத் தீர்க்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஒரு அதிரடி வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுவாக, வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்படுவதால், தனியாக வரும் வாக்காளர்கள் தங்கள் போனை எங்கே வைப்பது என்று தெரியாமல் தவித்து வந்தனர். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், இன்று ஒவ்வொரு வாக்குச்சாவடியின் நுழைவாயிலிலும் 'செல்போன் பாதுகாப்பு பைகள்' வழங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழையும்போதே அங்குள்ள தன்னார்வலர்களிடம் தங்களது செல்போனை ஒப்படைக்கலாம். போனைப் பெற்றுக் கொண்டதும், அதற்கு ஈடாக ஒரு பிரத்யேக டோக்கன் உங்களுக்கு வழங்கப்படும். நீங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டுத் திரும்பும் போது, அந்த டோக்கனைக் காண்பித்து உங்களது செல்போனைப் பாதுகாப்பாகப் பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதி காரணமாக, செல்போனைத் தொலைத்து விடுவோமோ அல்லது வீட்டில் வைத்து விட்டு வரவேண்டுமோ என்ற கவலை இன்றி மக்கள் உற்சாகமாக வாக்குச்சாவடிக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

வாக்குப்பதிவு ரகசியத்தைப் பாதுகாக்கவும், வாக்குப்பதிவு இயந்திரத்தைப் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்கவுமே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், வாக்காளர்களின் சிரமத்தைப் புரிந்துகொண்டு தேர்தல் ஆணையம் செய்துள்ள இந்தச் சிறப்பு ஏற்பாட்டிற்குப் பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாகத் தனியாக வரும் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் இந்த வசதியால் நிம்மதி அடைந்துள்ளனர். "இனி போனைப் பத்திரமா வச்சுக்க ஆள் தேட வேண்டாம், டோக்கன் இருந்தா போதும்" என வாக்காளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.