இன்று முழுவதும் மூத்தக்குடிமக்கள், மாற்றுதிறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்!
Dinamaalai April 23, 2026 09:48 AM

இன்று தமிழக சட்டமன்றத் தேர்தலை  முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாகப் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தங்களின் ஜனநாயகக் கடமையை எவ்வித சிரமமும் இன்றி ஆற்றுவதை உறுதி செய்யவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகையின்படி, 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் சாதாரண நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம். வாக்காளர்கள் தங்கள் வசிப்பிடத்திலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு எளிதாகச் சென்று வர ஏதுவாக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காகப் பேருந்து நடத்துனர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை அல்லது உரிய வயது/மாற்றுத்திறனாளி சான்றிதழ்களைக் காண்பித்து இந்தப் பயணச் சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம்.

தேர்தல் நாளன்று பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகளையும் இயக்கப் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் வாக்காளர்கள் நெரிசலின்றிப் பயணிக்கப் போதிய எண்ணிக்கையிலான பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, மூத்த குடிமக்களும் மாற்றுத்திறனாளிகளும் இன்று தங்களின் வாக்கினைப் பதிவு செய்து 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.