Sunita Williams: விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் 2025-இல் தான் வருவாரா? நாசா சொன்னது என்ன?
செல்வகுமார் August 27, 2024 05:38 PM

NASA மற்றும் Boeing ஆகியவை  ஸ்டார்லைனர் விண்கலத்தின் த்ரஸ்டர்கள் ஏன் சக்தியை இழந்தன மற்றும் ஏன் பல ஹீலியம் கசிவுகள் ஏற்பட்டன என ஆய்வு செய்து வருகின்றன.

விண்வெளியில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியமஸ்:

போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) அனுப்பப்பட்ட விண்வெளி வீரர்கள், Starliner விண்கலம் சரிசெய்யப்படவில்லை என்றால், பிப்ரவரி 2025 இல் SpaceX நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்பக்கூடும் என்று நாசா தெரிவித்துள்ளது

ஜூன் மாதம் ஏவப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலம், விண்வெளி பயணங்களுக்கு சோதனை செய்யும் வகையில் இரண்டு விண்வெளி வீரர்களான  இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் ஆகியோரை  சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது.


படம்: சர்வதேச விண்வெளி நிலையம்

சிக்கலால் நீட்டித்த பயணம்

ஏறக்குறைய எட்டு நாட்கள் பயணம் என்று முதலில் திட்டமிடப்பட்டது, விண்கலத்தை உந்தி தள்ளும் அமைப்பில் உள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாக இவர்கள் பயணம் கணிசமாக நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, பிரச்னைகளை சரிசெய்ய போயிங் மற்றும் நாசா அவசரமாக தீவிர முயற்சித்து வருகின்றன

இந்த சிக்கல்களால் ஸ்டார்லைனரின் விண்கலத்தில் பயணித்த மூத்த நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை உடனடியாக திரும்ப அழைத்து வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.

பூமிக்கு 2025:

 இதன் விளைவாக, அவர்களை வீட்டிற்கு கொண்டு வர ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தை பயன்படுத்த நாசா பரிசீலித்து வருகிறது. எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான SpaceX க்ரூ டிராகன் விண்கலம், செப்டம்பரில் வழக்கமான நான்கு விண்வெளி வீரர்களுக்குப் பதிலாக இரண்டு விண்வெளி வீரர்களை மட்டுமே கொண்டு  செல்ல திட்டமிடப்பட்டு நடந்து வருகின்றன. இதன் மூலம் வில்மோர் மற்றும் வில்லியம்ஸுடன் பூமிக்குத் திரும்ப திட்டமிடப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது. 


நாசாவின் கமர்ஷியல் க்ரூ புரோகிராம் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் தெரிவிக்கையில், போயிங் தனது விண்கலத்தில் நம்பிக்கையுடன் உள்ளது, விண்வெளியில் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க முயற்சித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும் உறுதியான முடிவுகள் ஒருசில வாரங்களுக்குள் எடுக்கப்படும் என நாசா தெரிவித்துள்ளது. 

நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்தாலும் , எந்தவொரு பாதிப்பு இல்லை, பாதுகாப்பாக உள்ளனர் என்றும் நாசா தொடர்ந்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.