மதுரை புத்தக திருவிழாவில் ஒலித்த பக்தி பாடல் கேட்டு அரசு பள்ளி மாணவிகள் சாமியாடிய காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மூடப் பழக்கங்களைத் தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும் விசிக எம்பி ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "ஒரு பாட்டைக் கேட்டு மாணவிகள் சாமி ஆடுகிறார்களென்றால் அது நமது கல்வி முறையின் தோல்வியல்ல, நமது பண்பாட்டின் தோல்வி !
கல்வி என்பது வகுப்பறைகளில் மட்டுமல்ல, வீடுகளிலும், வீதிகளிலும்கூடப் புகட்டப்படுகிறது. அங்கெல்லாம் மூடத்தனம் என்னும் நச்சுப் புகையைப் பரப்பிக்கொண்டு வகுப்பறையில் மட்டும் அறிவியல் என்னும் ஆக்ஸிஜனை செலுத்தினால் நமது இளைய சமுதாயத்தைக் காப்பாற்றவே முடியாது!
பீகார் மாநில அரசு 1999 ஆம் ஆண்டிலும்; மகாராஷ்டிரா மாநில அரசு 2013 ஆம் ஆண்டிலும்; கர்நாடக மாநில அரசு 2017 ஆம் ஆண்டிலும் இயற்றியதுபோல மூடப் பழக்கங்களைத் தடைசெய்யும் சட்டம் ஒன்றைத் தமிழ்நாடு அரசும் இயற்ற வேண்டும்" என முதலமைச்சர் முக ஸ்டாலினை எம்பி ரவிக்குமார் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.