சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில், மகா விஷ்ணு என்பவர் பாவ புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதோடு, முன்ஜென்ம தவறுகளால் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என்று பேசிய இவரின் பேச்சை பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் கண்டித்துள்ளார்.
இதற்கிடையே பள்ளி வளாகம் என்பது ஆசிரியர்களுக்கானது என்றும், மாணவச் செல்வங்களுக்கானது. நமது பள்ளிக்குள் நுழைந்து மாணவர்களிடம் உரையாடுபவர்களின் பின்புலத்தை ஆராய வேண்டிய கடமை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உண்டு. கல்வியால் உலகை வெல்வோம். அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம். கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் என்று, அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே எதற்காக நான் ஓடி ஒளிய வேண்டும். ஓடி ஒளியும் வகையில் நான் என்ன தவறான கருத்தை சொல்லிவிட்டேன் என்று மகாவிஷ்ணு வீடியோ வெளியிட்டு இருந்தார். மேலும் இன்று மதியம் சென்னை விமான நிலையம் வருகிறேன் என்றும், இந்திய சட்டத்தின் மீதும், தமிழக போலீசார் மீதும் எனக்கு மதிப்பு உள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் என்னை பற்றி அதிகம் பேசி இருந்தார். என் மீது ஒரு குற்றச்சாட்டு வந்துள்ளது. அதற்கு விளக்கம் கொடுக்க தமிழகத்தில் இருக்க வேண்டும். இறைவனிடம் சரணாகதி செய்து நேரடியாக உங்களை சந்திக்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்.
அதன்படி மகா விஷ்ணு தற்போது ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த நிலையில், அவர் மீதான புகாரின் அடிப்படையில் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் மகா விஷ்ணுவை அடையாறு காவல்துறை துணை ஆணையாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.