TNPSC: படிச்சிட்டீங்களா? நாளை குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு! இத்தனை லட்சம் பேரா எழுதுறாங்க?
சுகுமாறன் September 13, 2024 11:44 AM

மத்திய அரசு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் பதவிகளுக்கு யு.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்துவது போல தமிழ்நாடு அரசும் டி.என்.பி.எஸ.சி. மூலமாக தமிழக அரசின் பதவிகளுக்கு குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. 

அந்த வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் செப்டம்பர் 14ம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் நாளை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. கடந்த ஜூன் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, இந்த தேர்வுகளுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்து உள்ளனர். குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ-விற்கான முதல்நிலைத் தேர்வு நாளை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்காக 2 ஆயிரத்து 763 தேர்வு மையங்கள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வை எழுதும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஏற்கனவே ஹால் டிக்கெட் இணையம் மூலமாக வழங்கப்பட்டுவிட்டது. தேர்வு மையத்திற்கு ஹால் டிக்கெட்டுடன் காலை 9 மணிக்கு முன்பாகவே வந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் யாரும் தேர்வு மையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2 ஆயிரத்து 327 பணியிடங்கள்:

ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள முறைகளை முறைப்படி பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வு நடவடிக்கைகளை வீடியோவாக எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  குரூப் 2 தேர்வில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், துணை பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தனிப்பிரிவு அலுவலர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் பதவிக்கு தேர்வுகள் நடைபெறுகிறது.

குரூப் 2 ஏ பிரிவில் மேலாண்மை இயக்குனரின் நேர்முக உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், மேற்பார்வையாளர், இளநிலை கண்காணிப்பாளர், உதவியாளர் பணிகளுக்கு தேர்வுகள் நடைபெறுகிறது. குரூப் 2 தேர்வில் மொத்தம் 507 பணியிடங்களுக்கும், குரூப் 2 ஏ தேர்வில் மொத்தம் 1820 பணியிடங்களுக்கும் என மொத்தம் 2 ஆயிரத்து 327 பணியிடங்களுக்கு நாளை தேர்வு நடைபெறுகிறது. தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.  

90 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு கடந்த ஜூலை 13ம் தேதி நடைபெற்றது. 29 பணியிடங்களுக்கான குரூப் 1 பி, குரூப் 1 சி தேர்வுகள் கடந்த ஜூலை 12ம் தேதி நடைபெற்றது. நாளை குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெற உள்ளது. மேலும், வரும் டிப்ளமோ, ஐடிஐ அளவிலான 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்ப பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.