விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கேட்டு நேற்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் இரண்டு முறை அந்த வீடியோவை பதிவிட்டு எக்ஸ் பக்கத்தில் இருந்து நீக்கினார். இந்த வீடியோ சர்ச்சையாக மாறிய நிலையில் தாங்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே கேட்கும் ஒரு விஷயம் தான் என திருமாவளவன் விளக்கம் கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து நேற்று இரவு மீண்டும் அந்த வீடியோவை திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்த வீடியோவை வெளியிட்ட திருமாவளவனுக்கு சீமான் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். ஏற்கனவே மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் கட்சிகளுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்த நிலையில் திமுக கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக தற்போது திமுகவின் ஆட்சி அதிகாரத்தில் அதாவது அமைச்சரவையிலும் பங்கு வேண்டும் என்பது போல் திருமாவளவன் கேட்டது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது திமுக கூட்டணியில் தான் விசிக தொடர்வதாகவும் இந்த கூட்டணி எப்போதும் நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு அந்த வீடியோவை தான் வெளியிடவில்லை எனவும் தான் முன்பு எப்போதோ பேசியதை அட்மின் வெளியிட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் பொதுமக்கள் மது ஒழிப்பை எதிர்த்து போராட்டம் நடத்த மாட்டீர்களா என்று கேட்டதால்தான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். அதிமுகவுடன் கூட்டணி வைப்பதாக நாங்கள் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. மது ஒழிப்பு மாநாடை தேர்தலுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம். தேர்தலை கணக்கில் வைத்துக்கொண்டு மது ஒழிப்பு மாநாடு நடத்தினால் அதைவிட அசிங்கம் எனக்கு வேறு எதுவும் கிடையாது. கொள்கை வேறு கூட்டணி வேறு என்று கூறினார்.