UPI transaction limit: நல்ல சேதி..! யுபிஐ-ல் வந்த மாற்றம் - இனி ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம் வரை பணம் அனுப்பலாம்
குலசேகரன் முனிரத்தினம் September 16, 2024 11:44 AM

UPI transaction limit: யுபிஐ செயலிகளுக்கான தினசரி பணப்பரிவர்த்தனையில் இன்று முதல் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

யுபிஐ பணப்பரிவர்த்தனை உச்சவரம்பு:

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) UPI ஐப் பயன்படுத்தி மூன்று வகையான பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது. ஒரு சில குறிப்பிட்ட பயனாளர்களை கருத்தில் கொண்டு, யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) ஐப் பயன்படுத்தி ரூ.5 லட்சம் வரையிலான பரிவர்த்தனை தற்போது சாத்தியமாக்கப்பட்டுள்ளது. UPI ஒரு விருப்பமான கட்டண முறையாக உருவாகி வருவதால், குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு UPI இல் பரிவர்த்தனை வரம்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

யாருக்கெல்லாம் ரூ.5 லட்சம் உச்சவரம்பு:

வரி செலுத்துதலுடன் சீரமைக்கப்பட்ட பிரிவுகளின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு, ஒரு பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பின்வரும் பிரிவினர்களுக்கான பரிவர்த்தனை வரம்பு, நாளொன்றிற்கானரூ. 1 லட்சம் என்ற உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

1. வரி செலுத்துதல்

2. மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்

3. IPO மற்றும் RBI சில்லறை நேரடி திட்டங்களுக்கு

மேற்குறிப்பிடப்பட்டவர்களுக்கான புதிய உச்சவரம்பு, இன்று  முதல் அமலுக்கு வருகின்றன.

ஏற்பாடுகள் தீவிரம்:

செப்டம்பர் 15, 2024 ஞாயிற்றுக்கிழமைக்குள் வரி செலுத்தும் பரிவர்த்தனை வரம்பு அதிகரிப்புக்கு இணங்குவதை உறுதிசெய்யுமாறு வங்கிகள், கட்டணச் சேவை வழங்குநர்கள் மற்றும் UPI பயன்பாடுகள் உள்ளிட்ட கட்டண உள்கட்டமைப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து உறுப்பினர்களையும் NPCI கேட்டுக் கொண்டது.

இருப்பினும், பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு வணிகர்கள் வெரிஃபைட் செய்யப்பட வேண்டும். மேலும் உங்கள் வங்கி மற்றும் UPI ஆப்ஸுடன் இது குறிப்பாகப் பொருந்துகிறதா இல்லையா என்பதைப் பார்ப்பது சிறந்தது.  ஏனெனில் தனிப்பட்ட தினசரி UPI பரிவர்த்தனை வரம்புகளை வங்கிகள் தீர்மானிக்கலாம்.

வங்கி வாரியான உச்சவரம்புகள்:

சராசரியாக நாளொன்றிற்கான அதிகபட்ச UPI பரிவர்த்தனை வரம்பு ரூ.1 லட்சமாகும்,. ஆனால் வங்கிகளுக்கு அவற்றின் சொந்த வரம்புகளை அமைக்க அதிகாரம் உள்ளது. எடுத்துக்காட்டாக, அலகாபாத் வங்கியின் UPI பரிவர்த்தனை வரம்பு ரூ. 25,000. அதே சமயம் HDFC வங்கி மற்றும் ICICI வங்கி ஆகியவை பியர்-டு-பியர் பேமெண்ட்டுகளுக்கு ரூ.1 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளை அனுமதிக்கின்றன. கூடுதலாக, வெவ்வேறு UPI பயன்பாடுகள் மாறுபட்ட பரிவர்த்தனை வரம்புகளைக் கொண்டிருக்கலாம்.

மூலதனச் சந்தைகள், வசூல், காப்பீடு உள்ளிட்டவை UPI பரிவர்த்தனைகள் தினசரி ரூ. 2 லட்சம் வரம்பைக் கொண்டுள்ளன. இறுதியில், ஒரு நபர் UPI ஆப்ஸ் மூலம் பரிவர்த்தனை செய்யக்கூடிய பணத்தின் அளவு, அவர்களின் வங்கி மற்றும் அவர்கள் பயன்படுத்தும் UPI செயலிகளால் நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட வரம்புகளைப் பொறுத்தது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.