இன்று ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த தினம். கூடவே வளர்பிறை முகூர்த்த தினமாகவும் இருப்பதால் தமிழகத்தில் அனைத்து மலர் சந்தைகளிலும் பூக்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் ஓணம் என்பதால் கடந்த இரு தினங்களாகவே பூக்களின் விலை தமிழகத்தில் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இன்று வளர்பிறை முகூர்த்த தினத்தை முன்னிட்டு அதிகளவில் விலை வைத்து விற்பனை செய்யப்பட்டது.
ஓணம் பண்டிகையை கேரளத்தில் மட்டுமல்லாமல் கன்னியாகுமரி மாவட்டத்திலும், நாகர்கோவில் பகுதிகளிலும் உள்ள தமிழர்களும் கொண்டாடி வருகின்றனர். இதனால் கடந்த ஒரு வார காலமாகவே களியக்காவிளை, மார்த்தாண்டம், குலசேகரம், திற்பரப்பு, தக்கலை, பத்மநாபபுரம், அருமனை, கருங்கல் உள்ளிட்ட மாவட்டத்தின் பரவலான இடங்களில் ஓணம் ஊஞ்சல் கட்டியும், அத்தப்பூ கோலமிட்டும் ஓணத்தை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்று வந்தன. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளுக்கு ஓணம் நாளில் விடுமுறை என்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஓணம் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி குழந்தைகளும், கல்லூரி மாணவ - மாணவியரும் அத்தப்பூ கோலமிட்டு ஓணத்தை கடந்த ஒரு வார காலமாகவே இரண்டு நாட்களாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர்.
அத்தப்பூ கோலத்திற்கும், ஓணம் அலங்காரத்திற்கான பூக்களையும் வாங்க தோவாளை மலர் சந்தையில் மக்கள் அதிகளவில் கூடினர். தேவை அதிகமாக இருந்ததால் பூக்களின் விலை இரட்டிப்பானது. மல்லிகை பூ கிலோ ரூ.3,000-க்கு விற்பனையானது. பிச்சிப்பூ ரூ.2,000, கிரேந்தி ரூ.60, கோழிக்கொண்டை ரூ.60, வாடாமல்லி ரூ.200, தாமரை ஒன்று ரூ.10, மரிக்கொழுந்து ரூ.140, செவ்வந்தி ரூ.190-க்கு விற்பனை ஆனது. அத்தப்பூ கோலத்திற்கு தேவையான வாடாமல்லி, கோழிக்கொண்டை, கிரேந்தி போன்ற பூக்களை மக்கள் அதிகமாக வாங்கிச் சென்றனர். தோவாளை மலர் சந்தையில் வழக்கத்தை விட கூடுதலாக 150 டன் பூக்கள் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது. அதே போன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலும் பூக்களின் விற்பனை களைகட்டியது. எனினும் திடீரென கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை அதிர்ச்சியடைய செய்தது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா