தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அதிக வெயில் அடித்து வருகிறது என்பதும் அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென்மேற்கு காற்று குறைந்ததன் காரணமாக வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
கோடை காலம் போல் வெயில் மீண்டும் வறுத்து எடுத்து வருவதால் பொதுமக்கள் வெளியே வர தயங்கி வருகின்றனர் என்பதும் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதிகபட்சமாக தமிழகத்தில் சில இடங்களில் இரண்டு முதல் மூன்று செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மேற்கு வங்காள பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகத்தான் தமிழகத்தில் வறண்ட வானிலை ஏற்படுகிறது என வெப்பநிலை உயர்வதற்கான காரணத்தை வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Edited by Mahendran