புதுச்சேரி: 9 வயது சிறுமியின் கொடூர கொலை வழக்கு; முக்கிய குற்றவாளி சிறையில் தற்கொலை செய்தது எப்படி?
Vikatan September 17, 2024 12:48 AM

புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, கடந்த மார்ச் மாதம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், இரண்டு நாள்களுக்குப் பிறகு அதே பகுதியிலுள்ள கழிவு நீர் வாய்க்காலில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, கை, கால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். ஒன்பது வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், ஒட்டுமொத்த புதுச்சேரியையும் போராட்டக்களமாக மாற்றியது.

புதுச்சேரி சிறுமி கொலை

முத்தியால்பேட்டை காவல் நிலைய போலீஸார், கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். புதுச்சேரி, தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் என்ற முதியவரும், கருணாஸ் என்ற இளைஞரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கஞ்சா மற்றும் மது போதையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அதன்பிறகு கொலை செய்து வாய்க்காலில் வீசியது தெரிய வந்தது.

அதையடுத்து சிறுமியை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று பொதுமக்கள், மாணவர்கள், சமூக அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். அதேபோல குற்றவாளிகளுக்காக நாங்கள் யாரும் ஆஜராகப் போவதில்லை என்று அறிவித்தனர் புதுச்சேரி வழக்கறிஞர்கள். அதையடுத்து, `விரைவு நீதிமன்றத்தில் ஆறே மாதங்களில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்’ என்று அறிவித்தார், அப்போதைய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகனந்தன், துண்டால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

காலாப்பட்டு மத்திய சிறைச்சாலை

காலை 5 மணிக்கு உடலை மீட்ட சிறைக் காவலர்கள், அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட விவேகனந்தன், கடந்த மார்ச் மாதமே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ``விவேகானந்தனும், கருணாஸும் விசாரணைக் கைதிகள் பிரிவில், தனி செல்லில் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த செல்லின் வராந்தாவில்தான் இருவரும் படுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. கழிவறைக்கு மட்டும் உள்ளே சென்று வருவார்கள். இருவருக்கும் தனித்தனியாக துண்டு கொடுக்கப்பட்டிருந்தது. கருணாஸின் துண்டை தன்னுடைய துண்டுடன் முடிச்சுப் போட்ட விவேகானந்தன், சிறைக் கம்பிகளில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடன் இருந்த கருணாஸ் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் சடலத்தை மீட்டோம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

புதுச்சேரி: 500 பக்கங்கள்… 80 சாட்சிகள்… ஒன்பது வயது சிறுமி கொலை வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல்!
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.