கன்னியாகுமரி மாவட் டம் நாகர்கோவில் பழவூர் அருகே தெப்பக்குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது நீச்சல் தெரியாமல் ஒரு மாணவர் தெப்பக்குளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த சக மாணவர், நண்பனைக் காப்பாற்றுவதற்காக குதித்த நிலையில், அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகர்கோவில் அருகே தனியார் பொறியில் கல்லூரி ஒன்றின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 6பேர் பழவூர் அருகே உள்ள தெற்குகன்னங்குளம் தெப்பகுளத்தில் குளிப்பதற்காக நேற்று சென்றுள்ளனர். இந்நிலையில், தெப்பக்குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது, ஒரு மாணவர் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளித்ததாக கூறப்படுகிறது.
அவரை காப்பாற்றுவதற்காக கரையில் நின்றிருந்த நாகர்கோவில் வேதாநகரைச் சேர்ந்த மிக்கேல் மகன் ஆன்றனி ஜெபின்(19) தெப்பக்குளத்தில் குதித்துள்ளார். நண்பனைக் காப்பாற்றுவதற்காக அவசரமாக கரையில் இருந்து தெப்பக்குளத்தில் குதித்ததில், தெப்பக்குளத்தில் இருந்த படிகட்டில் ஜெபினின் தலை அடிபட்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நீச்சல் தெரியாமல் மூச்சு திணறிய மாணவர் காப்பாற்றப்பட்டார். இது தொடர்பாக பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.