விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் 4 இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திண்டிவனம் அருகே ஊரல் கிராமத்தைச் சேர்ந்த முரளி (23), தனசேகர் (21), திருநாவுக்கரசு (21), பிரகலாதன் (25) ஆகியோர், ஊரல் கிராமத்தை அருகாமை கிராமத்தைச் சேர்ந்த தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து வரும்8ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு சமூக வலைதளம் மூலமாக அறிமுகமாகியுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் 4 பேரும் சேர்ந்து அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது சிறுமியின் தாய்க்கு தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாயார், திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வாலிபர்கள் 4 பேர் தன்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து வருவது குறித்து புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருபா லட்சுமி தலைமையிலான போலீசார் அந்த 4 இளைஞர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட இளைஞர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 4 பேரையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.