தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் அடுத்த பெரியசாமிபுரத்தில் உள்ள குலதெய்வ கோவில் ஒன்றுக்கு, மதுரை மாவட்டம், ஜி.ஆர். நகரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு, சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளனர்.
தொடர்ந்து குலதெய்வ சுவாமியை தரிசனம் செய்த அவர்கள், இன்று காலை பெரியசாமிபுரம் கடற்கரையில் குளிப்பதற்காக சென்ற நிலையில், இதில் அதிகபட்சமாக பெண்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது, கடல் சீற்றம் அதிகமாக இருந்த நிலையில், கடலில் குளித்த மதுரை ஜி.ஆர். நகரை சேர்ந்த இலக்கியா, கன்னியம்மாள், முருக லட்சுமி, ஸ்வேதா மற்றும் அனிதா ஆகிய 5 பெண்களும் கடல் அலையில் சிக்கி உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்ற போது, இலக்கியா, கன்னியம்மாள் ஆகிய இருவரும் அலையில் சிக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அனிதா, சுவேதா, முருகலட்சுமி, ஆகிய 3 பேரும் பத்திரமாக காப்பாற்றப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேம்பார் போலீசார், அவர்களுக்கு வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.