திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே நீட் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் இரண்டு ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த நீட் பயிற்சி மையத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த மையத்தில் நெல்லையை தவிர்த்து கேரளா, புதுச்சேரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதி மாணவர்களும் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த நீட் பயற்சி மைய உரிமையாளர், மாணவர்களை பிரம்பால் கண்மூடித் தனமாக அடித்து கொடுமைப்படுத்தியதுடன், காலணியை வாசலில் முறையாக கழற்றி போடவில்லை எனக்கூறி, மாணவி ஒருவர் மீது காலணியை வீசியும் உள்ளார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதையடுத்து, போலீசார் மாணவர்களை சித்திரவதை செய்து வந்த நீட் பயற்சி மைய உரிமையாளர் உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அத்துடன், மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். இந்தச் சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.