வால்பாறை அருகே தாயின் கண்முன்னே தனது மகளை சிறுத்தை இழுத்து சென்று கடித்ததில், சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள ஊசிமலை எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அணுல் அன்சாரி என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், அணுல் அன்சாரியின் 6 வயது மகளான அப்சரா, அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தனது தாயுடன் நின்று கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கே பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று, திடீரென சிறுமி அப்சராவை கடித்து இழுத்துச் சென்றதால், இதைக்கண்டு சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து சிறுத்தை கடித்ததில் சிறுமி அப்சரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும், இது குறித்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.