முன்னாள் திமுக எம்எல்ஏ இல்லத் திருமண விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு தலைமை தாங்கினார். அதில் அவர் பேசும்போது, ''திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். பக்கத்து வீட்டில் என்ன தகராறு என்று சிலர் காத்திருப்பார்கள். அதுபோல இருக்கிறார்.
சென்னையில் மழை வந்தபோது சேலத்துக்கு ஓடிச் சென்று ஒளிந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் களத்தில் நின்றனர்.
இங்கு ஒருவருக்கு, தன் கட்சியை வளர்க்க யோக்கியதை இல்லை. அடுத்த கட்சியின் கூட்டணி எப்போது உடையும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
திமுக கொள்கைக்கான கூட்டணி. திமுக கூட்டணியில் விவாதங்கள் இருக்கலாம், விரிசல் ஏற்படாது. 2026 மட்டுமல்ல, அதற்குப் பின் வரும் அனைத்துத் தேர்தல்களிலும் திமுகவே ஆட்சிக்கு வரும்'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.