தனியார் மருத்துவமனையில் தனது மனைவியின் பிரசவத்தின் போது, குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்பான் வெட்டிய காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
அதே சமயத்தில் யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பது குறித்த எந்த தகவலையும் அமைச்சர் தெரிவிக்கவில்லை. அவருக்கு மன்னிப்பு கிடையாது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், தனியார் மருத்துவமனை மீது மட்டும் அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்து இருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது குறித்து அதிமுகவை சேர்ந்த நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "திமுகவின் துணை முதல்வர் பதவிக்கு இர்பானுக்கு மட்டுமே தகுதி உள்ளது, அவர் ஆல் இன் ஆல் அழகு ராஜா.
அவர் நல்ல மருத்துவர், நல்ல யூடியூபர், நல்ல உணவுப்பழக்கம், நல்ல கார் டிரைவர், நல்ல திரைப்பட ஆர்வலர், சின்னவரின் நல்ல செல்லப்பிள்ளை. அவர் ஒருபோதும் தண்டிக்கப்படமாட்டார். தமிழ்நாட்டில் அரசாங்கத்தை கையாளும் ஜோக்கர்களின் கூட்டம்" நேற்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மருத்துவமனைக்கு 10 நாட்கள் புது நோயாளிகள் போகக்கூடாது என்ற கடும் தண்டனை கொடுத்தது போல
இர்பான் வீடியோடிக்களை 10 நாட்களுக்கு யாரும் பார்க்கக் கூடாது ,லைக் பண்ணக்கூடாது கண்டிப்பாக அவர் சேனலை யாரும் சப்ஸ்கிரைப் பண்ணக்கூடாது போன்ற கடுமையான தண்டனையை மட்டும் கொடுத்துராதிங்க !
அவர் செய்தது கடும் குற்றமாக இருந்தாலும் இது போன்ற தண்டனையை கொடுத்துராதிங்க" என்று விமர்சித்துள்ளார்.
மேலும் பல்வேறு தரப்பினரும் இந்த விவரத்தில் தமிழக அரசையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.