பரமக்குடி அருகே ரயிலில் இருந்து பிரேக் ஷூ கழன்று வந்து தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராமநாதபுரம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே, சத்திரக்குடியை அடுத்த எட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (61). விவசாயியான இவர், அப்பகுதியில் உள்ள தனது வயலுக்கு செல்வதற்காக இன்று காலை ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ராமநாதபுரத்தில் இருந்து மதுரை சென்ற ரயிலின் பிரேக் ஷூ திடீரென கழன்று பறந்து சண்முகவேல் முகத்தில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வந்த சத்திரக்குடி போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.