விஜய் மாநாட்டிற்கு ஆசையாய் புறப்பட்ட இளைஞர்கள்.. மணல் லாரி மோதி பலியான சோகம்!
Webdunia Tamil October 27, 2024 03:48 PM

இன்று விக்கிரவாண்டியில் நடக்கும் த.வெ.க கட்சி மாநாட்டிற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்காக அதிகாலை முதலே ஏராளமான தொண்டர்கள் விக்கிரவாண்டி நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.

அவ்வாறாக இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை பெரிய மேட்டில் இருந்து இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் விக்கிரவாண்டிக்கு புறப்பட்டனர். சென்னை தேனாம்பேட்டை அருகே உள்ள டிஎம்எஸ் மெட்ரோ அருகே உள்ள சந்திப்பில் அவர்களது வாகனம் சென்றபோது வேகமாக வந்த மணல் லாரியில் மோதி நிலைத்தடுமாறி விழுந்துள்ளனர்.

இதில் லாரி அவர்கள் மீது ஏறி இறங்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். மற்றொருவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிக்னல்கள் சரியாக வேலை செய்யாததே விபத்துக்கு காரணம் என்று விபத்து பகுதியில் இருந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.