ஈரோடு மாவட்டத்திலுள்ள சிறுவலூர் மீன்கிணறு சின்ன மூப்பன் வீதியில் தனசேகர்-பாலாமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வந்தனா(10) என்ற மகளும் மோனிஷ்(7) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடன் தொல்லையும் அதிகமாக இருந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த தம்பதி குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர். நேற்று விஷ மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து வந்தனாவுக்கும், மோனிசுக்கும் கொடுத்தனர். அவர்களும் அந்த குளிர்பானத்தை குடித்தனர்.
ஆனால் கசப்பு காரணமாக இருவரும் குளிர்பானத்தை கீழே துப்பி விட்டு கதறி அழுதனர். சிறிது நேரத்தில் விஷம் கலந்து குளிர்பானத்தை குடித்த தனசேகரன் பாலாமணியும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே தனசேரும் பாலாமணியும் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.