திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொடுகாடு கிராமத்தில் ஜெயந்தி (43) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் தொழிற்சாலையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற 27 வயது மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி பாரதி (23)என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கும் நிலையில் கிருஷ்ணமூர்த்தி வேலையில்லாமல் வீட்டில் இருந்தார். இதனால் கிருஷ்ணமூர்த்தி தன் தாயிடம் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் எனக் கூறி அதற்காக அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளார். இதேபோன்று கடந்த 24ஆம் தேதி காலை தன் தாயிடம் கிருஷ்ணமூர்த்தி மீண்டும் பணம் கேட்டார். இனியும் கால தாமதம் செய்யாமல் பணத்தை தர வேண்டும் என்று அவர் தன் தாயை மிரட்டிய நிலையில் இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஜெயந்தி எந்த வேலைக்கும் போகாமல் பணம் கேட்டு என்னை நீ மிரட்டுகிறாயா என்று கோபத்தில் தன் மகனிடம் கேட்டார். அதன்பிறகு வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து வந்து தன் மகனின் மீது ஊற்றி தீ வைத்து எரித்து விட்டார். அவருடைய அலரல் சட்டத்தை கேட்ட பாரதி மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து கிருஷ்ணமூர்த்தியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவருக்கு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக பாரதி கொடுத்த புகாரின் பேரில் ஜெயந்தியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.