கோவை பீளமேடு பகுதியில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் பாஜக அலுவலகம் இருக்க வேண்டும் என்று தேசிய தலைவராக இருந்த போது செயல்படுத்த அமித்ஷா நடவடிக்கை மேற்கொண்டார். வீடியோ கான்பரன்ஸ் ரூம் மற்றும் புத்தக அறை என அனைத்து வசதிகளும் இந்த கட்டிடத்தில் உள்ளது. பிரதமரின் பெயரில் மருந்தகம் அமைக்க தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் இன்று முதல்வர் பெயரில் அதே போன்று மருந்தகங்கள் தொடங்கப்படுகின்றன. பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் பெயர்களில் மருந்தகம் அமைக்காமல் முதல்வர் மருந்தகம் என்று பெயர் வைத்ததே பாஜகவிற்கு கிடைத்த வெற்றி தான்.
இந்தியை திணிக்கிறோம் என்கிறார்கள். ஆனால் காசியில் தமிழ் சங்கமம் மூன்றாவது முறையாக நடத்தி வருகின்றோம். அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்துள்ளோம். மருத்துவக் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை தாய் மொழியில் தான் இருக்க வேண்டும் என்று கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியவர் மத்திய அமைச்சர் அமித்ஷா. அவர் எப்படி இந்தியை திணிப்பார்? தமிழகத்தில் மாணவர்கள் ஆங்கில வழி கல்விக்கு போய்விட்டனர். ஆனால் தமிழக அரசு அதனை மறைக்க பார்க்கிறது. முதல்வர் என்னதான் முயற்சி செய்தாலும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற முடியாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.