நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முக்கிய பரிந்துரை: அமைச்சரவை ஒப்புதல்! அடுத்து என்ன?
Seithipunal Tamil February 27, 2025 11:48 PM

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவிற்கான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் 14 முக்கிய பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை  ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள வக்ஃப் சொத்துகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த மசோதாவை, பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வு செய்தது. 

அதன் அறிக்கையில், பாஜக உறுப்பினர்களின் திருத்தங்கள் பிரதானமாக இடம்பெற்றன, ஆனால் எதிர்க்கட்சிகள் முன்மொழிந்த திருத்தங்கள் பெரும்பாலானவை நிராகரிக்கப்பட்டன.  

மசோதா தொடர்பான கூட்டுக் குழுவில் பாஜக கூட்டணிக் கட்சிகளின் 16 உறுப்பினர்கள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் இடம்பெற்றனர். 

மொத்தம் 66 திருத்தங்கள் முன்மொழியப்பட்ட நிலையில், அதில் 44 எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன, மேலும் பாஜக கூட்டணிக் கட்சிகள் பரிந்துரைத்த 23 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட்டுக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவிற்கான 14 திருத்தங்கள் அங்கீகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

மார்ச் 10ஆம் தேதியில் தொடங்கவுள்ள இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்ட அமர்வில், மத்திய அரசு இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.