டெல்லியின் தெற்குப் பகுதியில் உள்ள கபாஷேரா பகுதியில் அமைந்துள்ள ‘ஃபன் அண்ட் ஃபுட் வில்லேஜ்’ அம்யூஸ்மெண்ட் பூங்காவில் நடந்த ரோலர் கோஸ்டர் பயணத்தின் போது, 24 வயதான பிரியங்கா என்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் வியாழக்கிழமை மாலை 6:15 மணியளவில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
உடலில் பல்வேறு காயங்களுடன், பல பகுதியில் இரத்தம் வெளியேறியது, வலது காலில் ஆழமான வெட்டு, இடது காலில் காயம் மற்றும் கை,முழங்கால் பகுதிகளில் சிராய்ப்பு காயங்கள் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரியங்காவுடன் வந்திருந்த நண்பர் நிகில், உடனடியாக அவரை மணிப்பால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
ஆனால், மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, போலீசார் தடயவியல் அதிகாரியை மருத்துவமனைக்கு அனுப்பி அறிக்கையைப் பெற்றனர். விசாரணையின் தொடக்கத்தில் நிலவும் ஆதாரங்களின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது என்றும், திருமணம் நடைபெற உள்ள நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.