பரத் நடிப்பில் வெளியான ‘காதல்’ திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் சுகுமார். இவர் காதல் அழிவதில்லை, விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சென்னையை சேர்ந்த துணை நடிகை ஒருவருடன் சுகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த பெண்ணிடம் இருந்து நகை, பணத்தை சுகுமார் பெற்றதாக தெரிகிறது. சில நாட்கள் கழித்து அவருடன் பேசுவதை சுகுமார் நிறுத்திவிட்டார்.
இது குறித்து அந்த பெண் கேட்டபோது, தனக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டதாக அவர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், திருமணமானதை மறைத்து தன்னிடம் நகை, பணம் பெற்று மோசடி செய்ததாக மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்தார்.
இதையடுத்து, சுகுமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, சுகுமார் தலைமறைவானதாக கூறப்படுறது. அவரை தேடி கைது செய்யும் பணியில் காவல் துறை தீவிரம் காட்டியுள்ளது.