அதிமுக - பா.ஜ.க கூட்டணி தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல, அதிமுகவிற்கும் நல்லதல்ல என திருச்சி எம்.பி துரை வைகோ பேட்டியளித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, திருச்சி மாவட்டத்தில் ரயில்வே துறை சம்பந்தமான பணிகளை ஆய்வு செய்ய உள்ளேன். திருச்சி - எர்ணாகுளம், திருச்சி - பெங்களூர், திருச்சி - திருப்பதி ஆகிய பகுதிகளுக்கிடையே ரயில்கள் இயக்க மக்கள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து நான் ரயில்வே அமைச்சரிடம் பேசினேன் முதல் கட்டமாக திருச்சியில் இருந்து திருப்பதிக்கு ரயில் சேவை கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். இது தவிர வரும் காலங்களில் திருச்சியில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில் சேவைகள் இயக்க கோரிக்கை வைப்பேன். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து செயல்பட வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து ஜனாதிபதியாக இருந்தாலும் துணை ஜனாதிபதியாக இருந்தாலும் செயல்பட வேண்டும் மாறாக அந்த தீர்ப்பை விமர்சிப்பது தவறு. மகாராஷ்டிராவில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக அம்மாநில மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் மகாராஷ்டிராவில் இந்தி திணிக்கப்படாது மராட்டிய மொழி தான் கட்டாயம் என அம்மாநில பாஜக முதலமைச்சர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்களிலும் மறைமுகமாக இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். மதிமுகவில் நிலவிய சில பிரச்சனைகளால் எங்களுக்குள் கோபம் இருந்தது. ஆனால் வைகோவின் மனிதநேயத்திற்கு அந்த கோபம் அடிபணிந்து விட்டது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்கிற அடிப்படையில் உங்கள் கட்சியின் நலனுக்காகவும் தமிழ்நாட்டின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவோம். நான் இன்னும் நிறைய அரசியல் கற்றுக்கொள்ள வரக்கூடிய காலங்களில் கற்றுக்கொள்வேன். திமுக கூட்டணியில் அதிருப்தி நிலவுவது என்பது போல் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசவில்லை அவர் அப்படி பேசவும் மாட்டார். அதிமுக பாஜக கூட்டணி தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல அதிமுகவிற்கும் நல்லதல்ல.அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் அதிமுக தொண்டர்களுக்கே விருப்பமில்லை. எந்த பின்னணியில் அதிமுக பாஜக கூட்டணி உருவானது என்பது அனைவருக்கும் தெரியும். யாருக்கும் விருப்பமில்லாமல் தான் பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணி அதிமுகவிற்கும் பிடிக்கவில்லை மக்களுக்கும் பிடிக்கவில்லை. ஒவ்வாத கூட்டணி ஒரு போதும் வெற்றி பெறாது" என்றார்.