எந்த பருவநிலை நிலவினாலும் உற்சாகமுடன் இருக்க வேண்டும் என்று மதுப்பிரியர்கள் அந்தந்த பருவநிலைக்கு ஏற்ப மதுபானங்களை வாங்கி குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில் கோடை கொளுத்தும் வெயிலுக்கு இதமாக புத்துணர்வை கொடுக்கும் 'பீர்' வகைகள் தான் மதுப்பிரியர்களின் முக்கிய தேர்வாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலம் தொடங்கியதும் மற்ற மதுபான வகைகளை வாங்கி பருகுவதை குறைத்துவிட்டு 'பீர்' வகைகளை அதிக அளவில் தேர்ந்தெடுக்கின்றனர்.
இதனால் கோடை காலத்தில் 'பீர்' விற்பனை பலமடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த மார்ச் மாதம் தொடக்கம் வரை 'பீர்' வகைகளின் விற்பனை சற்று குறைவாகவே இருந்தது. மார்ச் மாத இறுதியில் இருந்து 'பீர்' விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் இளநீர், தர்ப்பூசணி, மோர், நுங்கு மற்றும் குளிர்பானங்களை பருகிவருகின்றனர்.
ஆனால் மதுப்பிரியர்கள் 'பீர்' வகைகளை அதிக அளவில் வாங்கி பருக தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரத்துக்கு மேல் 'பீர்' வகைகள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.