மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி - தஞ்சாவூரில் சோகம்.!
Seithipunal Tamil April 28, 2025 07:48 PM

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூதலூர் காங்கேயர்டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சம்பத் - தமிழரசி தம்பதியினர். இவர்களுடைய மகன் லோக கணேஷ். இவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

தந்தை இறந்து விட்டதால் தாயார் பராமரிப்பில் வளர்ந்து வந்த லோக கணேசுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் என்பதால் தனது பாட்டி வீடான பூதலூர் அருகே உள்ள விண்ணமங்கலத்திற்கு தனது தாய் தமிழரசியுடன் சென்றிருந்தார்.

அங்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு குளிப்பதற்காக லோக கணேஷ் குளியலறைக்கு சென்று மின்விளக்கு சுவிட்சை போட்டுள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியதில் லோக கணேஷ் மயங்கி விழுந்துள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பூதலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவன் லோக கணேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறந்தநாள் அன்று மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.