பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அனுமதி அளித்தால் நான் பாகிஸ்தானுக்கு தற்கொலை படையாக செல்ல தயாராக இருக்கிறேன் என கர்நாடக வீட்டு வசதித் துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கானின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக வீட்டு வசதித் துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், “பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அனுமதியுடன் எனக்கு ஒரு தற்கொலை வெடிகுண்டை அளித்தால் எனது உடலில் கட்டிக் கொண்டு பாகிஸ்தானுக்கு சென்று எதிரிகளை தாக்குவேன். நான் நகைச்சுவையாகவோ அல்லது உணர்ச்சிவசப்பட்டு பேசவோ இல்லை. நான் வெறும் வார்த்தைகளுக்காக கூறவில்லை, அல்லா மீது ஆணையாக கூறுகிறேன். நமது எதிரிகளை அழிக்க நான் எனது உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.