இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் மீண்டும் வரும் மே 17ம் தேதி முதல் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்களா? என்கிற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
கடந்த மார் 18ம் தேதி ஐபிஎல் தொடரின் 18வது சீசன் தொடங்கிய நிலையில், இதுவரை 59 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. சென்னை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், இன்னும் 12 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆஃப் சுற்று போட்டிகள் மட்டுமே நடத்தப்பட உள்ளது.
வரும் மே 17ம் தேதி பெங்களூரு - கொல்கத்தா அணிகள் பெங்களூருவில் மோத உள்ளன. 13 லீக் ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 4 பிளே-ஆப் சுற்று என மொத்தம் 17 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. பாதியில் ரத்தான பஞ்சாப்- டெல்லி இடையிலான லீக் ஆட்டம் மீண்டும் நடத்தப்பட உள்ளது. எஞ்சிய ஆட்டங்கள் பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை, ஆமதாபாத் ஆகிய 6 இடங்களில் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெற இருந்த சென்னை - ராஜஸ்தான் இடையிலான ஆட்டம் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மே 29-ம் தேதி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றும், மே 30-ம் தேதி வெளியேற்றுதல் சுற்றும், ஜூன் 1ம் தேதி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றும், ஜூன் 3-ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது.