எழுத்தாளர், சமூக ஆர்வலர் மற்றும் வழக்குரைஞர் என பன்முகத்தன்மை கொண்டவர் பானு முஷ்டாக் . இவர் கன்னடத்தில் எழுதிய 'ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தை, பத்திரிகையாளரான தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 'ஹார்ட் லேம்ப்' என புத்தகமாக வெளியிட்டார். இதன்மூலம், சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் என்ற பெருமையை பானு முஷ்டாக் பெற்றுள்ளார்.
இந்தப் புத்தகத்தில் தென்னிந்தியாவில் வாழும் முஸ்லீம் பெண்களின் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளை புத்திசாலித்தனத்துடனும், நிதானத்துடனும் 1990 முதல் 2023 வரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக 30 ஆண்டுகள் எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பான 'ஹார்ட் லேம்ப்' சர்வதேச புக்கர் விருதை வென்று அசத்தியுள்ளது.
நடப்பாண்டு புக்கர் பரிசு பட்டியலில் இவரின் 'ஹார்ட் லேம்ப்' என்ற புத்தகத்துடன் சேர்த்து மொத்தம் 6 புத்தகங்கள் போட்டிக்களத்தில் இருந்தன. தற்போது அவரின் 'ஹார்ட் லேம்ப்' புத்தகம் புக்கர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எழுத்தாளர் பானுவுக்கும், மொழிபெயர்ப்பாளர் தீபா பாஸ்திக்கும் பரிசுத்தொகையான 50,000 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.48 லட்சம்) சமமாக பகிர்ந்தளிக்கப்படும்.
இதற்கு முன்னதாக, 2022ம் ஆண்டில், கீதாஞ்சலிஸ்ரீ மற்றும் மொழிபெயர்ப்பாளர் டெய்சி ராக்வெல் ஆகியோரின் ஹிந்தி நாவலான 'டோம்ப் ஆஃப் சாண்ட்' இந்தியா சார்பில் முதலாவது புக்கர் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.