சீனாவில் அன்ஹுய் மாகாணம் ஃபெங்யாங் பகுதியில் 650 ஆண்டு பழமையான டிரம் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரம் 1375ம் ஆண்டு மிங் வம்சத்தின் காலத்தில் கட்டப்பட்டது. சமீபத்தில் இந்த கோபுரத்தின் கூரை ஓடுகள் சிதறி விழுந்தன. சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் இருந்த வேளையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால், பலர் பதறி ஓட்டம் பிடித்தனர்.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட நபர் “ஓடுகள் விழும் ஒலி ஒரு முதல் 2 நிமிடங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது ” என கூறினார். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது சிறப்பான விஷயம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கோபுரம் 1995ம் ஆண்டு மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது. 2023ல் மேலும் ஒரு புதிய மறுசீரமைப்பு தொடங்கி, 2024 மார்ச் மாதம் தான் முடிக்கப்பட்டது. ஆனால் தற்போது இடிந்த பகுதி அந்த மறுசீரமைக்கப்பட்ட கூரை பகுதியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் கட்டுமானத் தரம் குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. “மூலக் கட்டிடம் 650 ஆண்டுகள் தாங்கி வந்தது, ஆனால் நவீன புதுப்பிப்பு ஒரு வருடத்திலேயே சிதறிவிட்டது” என பலரும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.