இளம்பெண் பாலியல் புகார்... வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!
Dinamaalai May 30, 2025 02:48 AM


தூத்துக்குடியில் இளம்பெண்ணுக்கு ஒருவர் பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் விடுத்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி கங்கா பரமேஸ்வரி நகரில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம்பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஏற்கனவே தென்மலை தென்குமரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்தாராம். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையம், ஊரக துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  புகார் அளித்தும் காவல்துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், மாநிலம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்தார். இதனிடையே தென்மலை தென்குமரனை இளம்பெண் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக தென்மலை தென்குமரன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இளம்பெண் மீது பிசிஆர் வழக்கு பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில், இளம்பெண் புகார் தொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விசாரணையில் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.